வெப்பாலை மரத்தின் மருத்துவப் பயன்கள்
வெப்பாலை மரத்தின் மருத்துவப் பயன்கள்பாலை நிலத்தில், மற்றும் நிலப்பகுதிகளில் வளரும் மரம் செடி கொடிகள்கூட வாடி, கருகும் கடும் கோடைக்காலத்திலும், இயற்கையின் கருணையால், இலைகள் தளிர்த்து, பூக்கள் மலரும் அதிசய மரமாகத் திகழ்கிறது. தமிழகத்தின் சில திருக்கோவில்களில் தல மரமாகத் திகழும் அரிய மரம், வெப்பாலை மரம்.
சற்றே நீளமான இலைகளுடன், கொத்தாக மலரும் வெளிர்வண்ணப் பூக்களுடன், இதன் காய்கள் நீண்டு, இரட்டையாகக் காய்த்துக் குலுங்கும். இதன் மரப்பட்டைகளை வெட்டினால், நீர்ச்சத்து மிக்க பால் பீறிடும், இதனாலே, இந்த மரத்தின் பட்டைகளை, யானைகள் தந்தத்தால் உரித்து, இதன் பாலைப் பருகும் என்பர். யானை உரித்த பட்டைகளைக் கொண்டதாலோ என்னவோ, இதன் பட்டை உரிந்த தண்டுகள், இள வெண்ணிறத்தில், தந்தங்கள் போன்றே, காணப்படும். இதனால், தந்தப் பாலை என்றும் வெப்பாலை மரத்தை அழைப்பர்.
வெப்பாலை மரத்தின் நன்மைகள்,
தமிழகத்தில், இரும்பாலை, நிலப்பாலை என்று அழைக்கப்படும் வெப்பாலை, சாலையோரங்களில், குறுங்காடுகள் மற்றும் மலைகளில் பரவலாகக் காணப்படும். வெப்பாலை மரத்தின் இலைகள், பூ, காய்கள், பட்டை போன்ற அனைத்து பாகங்களும், மனிதர்களுக்கு, நற்பலன்கள் தரவல்லவை.
வெப்பாலையின் குணாதிசயமாக, உடல் சூட்டையும் அதனால் ஏற்படும் வியாதிகளையும் தணிக்கக்கூடியது. இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைக் கரைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது, வியர்வையை அதிகரித்து, சரும வியாதிகள், மூல வியாதிகளைப் போக்கக்கூடியது. வயிற்றில் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்து, முக்குற்றங்கள் எனும் வாதம், பித்தம் மற்றும் கபம் இவற்றை சமநிலையில் இருத்தி, உடல் ஆரோக்கியத்தை சீராக்கும் வல்லமை மிக்கது, வெப்பாலை.
வெப்பாலையில் காணப்படும் வேதிப்போருட்களான சைக்ளோஆர்டேன், பீடா சிடோஸ்டெரால், பீடா அமிரின் மற்றும் தாதுக்கள், அமிலங்கள், உடலில் ஏற்படும் வியாதிகளைத் தணித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
1.சொரியாசிஸ் எனும் சரும வியாதி விலக :
சொரியாசிஸ் எனும் செதில் செதிலாக தோல் வெளுத்து, உதிரும் சரும வியாதி, மனிதர்களின் உடலெங்கும் ஏற்பட்டு, அதனால் அரிப்பு, தடிப்பு மற்றும் நீர் வடிதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பால் ஏற்படும் மன உளைச்சல் ஒரு பக்கம் என்றால், நவீன மேலை மருத்துவம், இதை குணப்படுத்த முடியாது, கட்டுப்படுத்தினாலும், தொடரும் என்று கூறுவதால், அடையும் வேதனை மறு பக்கம் என்று இந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், மிகுந்த மன வேதனைகள் அடைவர்.
இந்த பாதிப்புக்கெல்லாம் அருமருந்தாக, சொரியாசிஸ் சரும வியாதியை, உடலில் இருந்து விலக்கி, பாதிப்படைந்தவர்களின் மனத்துயரைக் களையும் ஆற்றல் மிக்கது, வெப்பாலை.
2. மருந்து தயாரிக்கும் முறை :
வெப்பாலை இலைகளை சிறிது எடுத்துக்கொண்டு, நன்கு அலசி, அவற்றை தேங்காயெண்ணை உள்ள ஒரு மண் சட்டியில் கலந்து மேல்புறம் ஒரு மெல்லிய துணியைக் கொண்டு கட்டி, வெயிலில் வைக்க வேண்டும். தொடர்ந்து ஆறேழு நாட்கள் வெயிலில் வைத்து எடுத்த வெப்பாலை எண்ணை, நிறம் மாறி இருக்கும்.
இந்த எண்ணையை தினமும் இரவில் படுக்கும்போது, உடலில் சொரியாசிஸ் பாதிப்பு ஏற்பட்ட இடத்தில், தடவி வர வேண்டும். காலையில் குளிக்குமுன் இந்த வெப்பாலை எண்ணையை, பாதிப்புள்ள இடங்களில் தடவி, சற்று நேரம் சூரிய ஒளி படும்படி, நிற்க வேண்டும்.
தொடர்ந்து இப்படி வெப்பாலை எண்ணையை, ஒரு மண்டலம் எனும் நாற்பத்தெட்டு நாட்கள் தடவி வர, சொரியாசிஸ் பாதிப்புகள் விலகி, உடலும் மனமும் புத்துணர்வு பெறும். மேலும், இதர சரும வியாதிகளும் நீங்கி விடும்.
3. பொன்னுக்கு வீங்கி :
வெப்பாலை இலைகளை மையாக அரைத்து, அதை, பொன்னுக்கு வீங்கி என்று கூறப்படும் தாடை வீக்கம் மற்றும் அக்கி போன்ற கட்டிகளின் மேல் தடவி வர, வலிகள் குறைந்து, வீக்கமெல்லாம் வடிந்து விடும்.
4. பற்சொத்தை குணமாக :
பல்வலி, பற்சொத்தை மற்றும் பல் ஆடுதல் போன்ற பாதிப்புகளை சரியாக்க, வெப்பாலை இலைகளை சிறிது இந்துப்போடு கலந்து, வாயில் இட்டு மென்று சற்று நேரம் கழித்து கொப்புளித்து வர, பல் வலி பாதிப்புகள் சரியாகி விடும்.
5. பெண்களின் தாய்மைப்பேறு :
சில பெண்களுக்கு உடல் குறைபாடு காரணமாக, தாய்மை அடைய வாய்ப்பின்மை அல்லது காலதாமதம் ஏற்படலாம். அது போன்ற பாதிப்புகளைக் களைய,
வெப்பாலை இலைகள், கீழாநெல்லி இலைகள் மற்றும் நொச்சி இலைகள் இவற்றை சமமாக எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு மை போல அரைத்து, தினமும் ஒரு வேளை, ஒரு மண்டலம் எனும் நாற்பத்தெட்டு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, வாய்ப்பில்லாமல் இருந்த தாய்மையை, விரைவில் அடையும் நற்பேற்றை, மணமுடித்தப் பெண்கள் பெறுவார்கள். மேலும், இந்த மருந்தே, பெண்களின் ஒழுங்கற்ற மாதாந்திர விலக்கையும், சரியாக்கும்.
6. மஞ்சள் காமாலை :
வெப்பாலை மரம், மஞ்சள் காமாலை வியாதியின் பாதிப்பை விரைவில் குணப்படுத்துவதால், இந்த மரத்தை கிராமங்களில், மஞ்சள் காமாலையைப் போக்கும் மரம் என்று அழைக்கின்றனர்.
வெப்பாலை இலைகள், கீழாநெல்லி இலைகள், கொட்டை முத்து இலைகள் எனும் ஆமணக்கு இலைகள் இவற்றை மையாக அரைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த விழுதை, ஒரு எலுமிச்சையின் பாதி அளவு எடுத்து வெண்ணை எடுத்த மோரில் கலந்து பருகி வர, ஓரிரு நாட்களில் மஞ்சள் காமாலை பாதிப்புகள் மறைந்து போகும்.
7. வெப்பாலைக் காய்களின் மருத்துவ நன்மைகள் :
வெப்பாலை காய்களை நன்கு காயவைத்து, அதில் உள்ள விதைகளைத் தூளாக்கி, அந்தத் தூளில் விரல் நுனி அளவு எடுத்து, தேனில் குழைத்து, தினமும் சாப்பிட்டு வர, குடலில் உண்டான புழுக்கள் அழிந்து வெளியேறும், ஜுரம் வயிற்றுப் போக்கு பாதிப்புகள் நீங்கி விடும்.
8. கருப்பை வீக்கம் குறைய :
வெப்பாலை விதைகளை காயவைத்து, அரைத்து தூளாக்கி, அதில் விரல் நுனி அளவு எடுத்து, தினமும் இரு வேளை தேனில் குழைத்து சாப்பிட, இரத்த நாளங்களில் சேர்ந்திருக்கும் கெட்ட கொழுப்பான ட்ரை கிளிசரைட்ஸை கரைத்து, அடைப்பை நீக்கி, இரத்தத்தை தூய்மை செய்து, இதய இயக்கத்தைக் காக்கிறது.
தாய்மார்களின் கருப்பை வீக்கத்தை, வடியச் செய்து, அவர்களின் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும், கருப்பை புற்று வியாதியையும், மார்பகப் புற்று வியாதியையும் ஏற்படுத்தும் நச்சுக்கிருமிகளை அழித்து, உடலைப் பாதுகாக்கும் அதிவிரைவு கமெண்டோவாகத் திகழ்கிறது, வெப்பாலை.இந்த மருந்தே, பாதிப்படைந்த தாம்பத்ய வாழ்வையும், சரி செய்யும்.
9. விஷக்கடியை முறிக்க :
வெப்பாலை தூளோடு, சில மிளகுகள் சேர்த்து, தண்ணீரில் இட்டு, நன்கு காய்ச்சி, சுண்டி வந்ததும் ஆற வைத்து, அதில் பனங்கற்கண்டு கலந்து பருகி வர, கடுமையான விஷக்கடியின் விஷங்களை முறிக்கிறது. ஜுரத்தைப் போக்கி, பேதியை குணப்படுத்தும். மேலும், சரும வியாதிகளை குணப்படுத்தும் ஆற்றலும் மிக்கது.
10. இரத்தப் போக்கை விலக்கும் வெப்பாலை சூரண நீர்:
மேற்சொன்ன வெப்பாலைக் குடிநீரே, உடலில் பல்வேறு வியாதிகளின் பாதிப்பால், சிறுநீர் வழியே, சளியின் வழியே வெளிப்படும் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தி, உடலை, தளர்வின்றி, தெம்பு அடைய வைக்கும்.
11. சரும நோய்கள் தீர :
மேலும் வெப்பாலைக் குடிநீரோடு சிறிது சுக்குப் பொடி கலந்து, அதில் தேனைக் குழைத்து, தினமும் ஒரு வேளை சாப்பிட, மூல வியாதிகள் சரியாகும், தேன் இல்லாமல், இந்தப் பொடியை உடலில் சரும வியாதி பாதிப்புகள் உள்ள இடங்களில் தடவி வர, தேமல் உள்ளிட்ட சரும பாதிப்புகள் விலகும்.
12. உடல் வீக்கம் போக்கும் :
உடலில் ஏற்படும் வீக்கங்களைக் கரைக்க, உலர்ந்த வெப்பாலைப் பட்டைகளை, நன்கு இடித்து தூளாக்கி, அதை வீக்கங்களின் மீது சிறிது தடவி வர, வீக்கங்கள் வடியும். வெப்பாலை சூரணத்தை சிறிது எடுத்து, அதைச் சிறிது மிளகுத் தூளுடன் தேனில் கலந்து தினமும் சாப்பிட்டு வர, உடல் வலி, மூட்டு வலி மற்றும் குறுத்தெலும்பு வலிகள் விலகிப் போகும்.
13. கொழுப்பை கரைக்க :
இரத்தக் கொழுப்புகளைக் கரைக்கிறது, இதயத்தைக் காக்கிறது, கடுமையான சரும வியாதிகளை இலகுவாக சரி செய்கிறது. மஞ்சள் காமாலை, புற்று வியாதிகளை கட்டுப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் கடும் இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தி, பலவீனமான உடலை, தேற்றுகிறது. வயிற்றில் உள்ள நச்சுப் புழுக்களை அழித்து, வெளியேற்றுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை பாதிப்பையும் விலக்கும் வெப்பாலை, . இவற்றோடுகூட, குடுமபத்திலும் அமைதியை நிலைநாட்டுகிறது.
14. கணவன் மனைவியை, ஒற்றுமையாக்கும் வெப்பாலை மரம் :
வெப்பாலை மர நிழலில் அமரும் கணவன் மனைவிக்கிடையே உள்ள பிணக்குகள் விலகி, அவர்களின் மனம் ஒன்றிணைந்து, அவர்களின் அன்பில், குடும்பம் அமைதியாக, வெப்பாலை மரத்தின் காற்றே, காரணமாகிறது என்கின்றனர், மூத்தோர்.
இதுபோன்ற, அரிய நற்பலன்களை நமக்கு அளிக்கும், அற்புத வெப்பாலை மரங்களை அதிக இடங்களில் வளர்த்து வர, நமக்கு இந்த மரங்களின் பலன்களைக் கிடைக்கச் செய்வோம்.
Post a Comment